குறிப்பு: சாரு நிவேதிதா கூறியுள்ள சிலவற்றை இந்த வலைப்பதிவில் சிலமுறை மேற்கோள் காட்டியுள்ளத்தால் அவரின் ரசிகன் நான் என்பது போல தோற்றம் வரக்கூடும்; அதை தெளிவு செய்யவே இந்த இடுகை. பின் வரும் கருத்துக்கள் அனைத்தும் charuonline.com' இல் இதுவரை வெளிவந்துள்ள சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை மட்டும் அடிப்படையாகக் கொன்டவை. எழுத்துப்பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்.
----------------------------------------------------------
'கடிதம்' என்ற பேரில் சாரு நிவேதிதா வெளியிடும் ஜால்ரா வாக்குமூலங்கள் எல்லாம் சென்னை தொலைக்காட்சி நிலையம் எதிரொலி கடிதங்களை விட மோசமாக இருந்து வருகின்றன.
"சுண்டைக்காய் பொறியல் அருமை, இது போல் மேலும் சமையல் குறிப்புகளை செ.தொ.நி தயாரிக்க வேண்டும்" என்பது போல், சாரு சமீப காலமாக எழுதி வரும் விஷயமற்ற வெற்று "காதல் கடி" SMS களை கூட புகழ ஆட்கள் இருப்பது ஒன்றும் ஆச்சர்யபடுத்தவில்லை. தமிழ் சினிமாவின் அவல நிலை பற்றி வாய் கிழிய பேசும் சாரு, அதற்கு ஆதாரமாக இருப்பதே தமிழ் சினிமாவில் உள்ள "கலைஞர்களின்" மமதை என்றும் தெரிந்திருக்க வேண்டும். அந்த மமதைக்கு காரணமே வெத்து வேட்டு நடிகர்களை புகழக்கூட பல அடிப்பொடிகள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த கருத்தை ஏதோ நன்கு உள்வாங்கிக்கொண்டு பேசுவது போல் இவர் கமலையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டுபேசியது நகைப்புக்குரியது. (அந்த ஒப்பீட்டில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது வேறு விஷயம்.)
இதுவரை சாரு விமர்சனம் என்று கூறிக்கொண்டு பதில் எழுதியது அனைத்தும் விமர்சனங்களே இல்லை. ஏதோ "நான் ஏத்தி விடுவணாம், நீ எடுத்து குடுப்பியாம்" என்பது போல சப்பானிதனமான கேள்விகள், அதற்கு மேம்ப்போக்குத்தனமான பதில்கள்; அதுவும் அத்தி பூத்தாற்போல். பெரும்பாலும் பிரசுரிக்கப்படும் கடிதங்கள் அனைத்தும், எழுதியவர் இவரை எப்படி எல்லாம் உயர்வாக நினைக்கிறார், அல்லது சாரு ஏன் ஒரு இலக்கியப் புலி என்று அவர் கருதிகிறார், அல்லது எப்படியெல்லாம் இவரை முத்தமிட விரும்புகிறார் என்பதாகத்தான் இருக்கின்ற. புகழை விரும்பாதவன் என்று பிரகடனம் செய்து கொண்டு இம்மாதிரியான வெற்றுப்பிரசுரங்கள் எதற்கு என்று தெரியவில்லை? இவர் மிக உயர்வாக மதிப்பிடும் எழுத்தாளர்கள் இப்படித்தான் "முதுகு சொறி" கடிதங்களை வெளியிட்டுக்கொண்டும் தன் ஏதோ ஒரு படைப்பை மட்டும் "உலக தரம்" என்றும் பினாத்திக்கொண்டு இருந்தார்களா என்று தெரியவில்லை.
இவரின் எழுத்துக்களில் உள்ள ஆணாதிக்கத்தன்மை, அவசியமற்ற போலி அழகியல் கூறுகள் என்று பல விமர்சனங்களை முன்னிறுத்தி பல முறை நானே இவருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன், அவை எதற்குமே இதுவரை பதில் வரவில்லை (அவர் எதையும் பிரசுரிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும், சுருக்கமான பதிலாவது வரும் என்று எதிர்பார்த்தேன்). காமம் சார்ந்த ஒழுங்கியல், அதன் வரலாற்று அதிகார இருப்பிடங்கள் குறித்த எந்த ஒரு கட்டுடைப்பு சார்ந்த ஒப்பீடோ, கருத்தாக்கமோ இல்லாமல் வெறுமனே இவர், இவரின் நண்பர்கள் பலர் இளம் பெண்களுடன் பரிமாறிக்கொள்ளும் sms' களையும், தொலைபேசி உரையாடல்களையும் வெளியிடுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை (other than feeding aged, male, sexually frustrated minds. It's sure a noble cause if that is it). இவற்றை எந்த போர்னோ ரகத்திலும் சேர்த்த முடியாது. of course, இந்த கூட்டத்தில் ஒரு இளம் ஆண் ஒரு முதிர்ந்த பெண்ணுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு பற்றி ஒன்றும் எழுத மாட்டார். கேட்டால் எனக்கு அம்மாதிரி நண்பர்கள் இல்லை என்பார். ஏன் இப்படி உங்கள் கதைகளில் புளுகுகிறீர்கள் என்று கேட்டால் மட்டும் "இது புனைவு" என்று அங்கலாய்ப்பார். ஆனால் ஒரு முதிர்ந்த பெண்ணின் காம உணர்வுகள் பற்றி மட்டும் புனைய மாட்டார். தமிழ் சமுதாயத்தின் உடல் சார்ந்த அடக்கு முறைகளை அகற்ற இவர் போல் பாடுபடுபவர்கள் இல்லைதான்.
சாருவின் திரைப்பட விருப்பு வெறுப்புகள் (குறிப்பாக சமீபத்ய விருப்புகள்) பற்றி கேட்கவே வேண்டாம்: பருத்திவீரனின் ஆணாதிக்க கதாநாயகன் புதுமை என்று சொன்னது முதல் மொக்கை-திருட்டு-மாயாஜால கலவையான ஓம் ஷாந்தி ஓம்'இல் உள்ள பின் நவீனத்துவ கூறுகளை கண்டறிந்தது வரை சாருவின் சினிமா கூர்மை பல சமயங்களில் மழுங்கியிருக்கிறது.
இது எல்லாவற்றையும் விட என்னை மிகவும் எரிச்சலூட்டியது சாருவின் சமீபத்திய வித்தை: வலைத்தளத்தில் இவர் படித்து ரசித்த கென் - கென்னை - தன் வாரிசு என்று அறிவித்தது. பாசிசம் பற்றியும் அதிகார மையங்கள் பற்றியும் பீராயும் அதிபுத்திசாலி சாரு, இந்த "வாரிசு" வித்தையை எந்த ரகத்தில் சேர்ப்பார்? கென் சாருவிடம் போய் "ஐயா நான் உங்கள் பரம ரசிகன், உங்களை நான் என் தந்தைக்கும் மேலாக நினைக்கிறேன், ஆதலால் என்னை உங்கள் வாரிசாக அறிவியுங்கள்" என்று மன்றாடினாரா? (கென் பிறகு சாருவுக்கு கடிதம் எழுதியது, அந்த கடிதத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் வேறு; இங்கு சம்மந்தம் இல்லை. தெருவில் போகும் ஒரு முதியவர், சும்மா எதிரில் வரும் என்னை பார்த்து "நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்" என்று கூறினால், நான் நினைப்பேன் "பெருசு ஏதோ சொல்லுது, அது மனசு நோகாதமாறி எதாச்சும் சொல்லிட்டு நடயகட்டு". அது போலத்தான் கென் எழுதிய பதில் கடிதம்.)
அடுத்து இவர் கருணாநிதி பற்றி உருவாக்க நினைக்கும் மாயை. ஏதோ கருணாநிதி போன்ற ஒரு பரம சாதுவை இங்கு பாக்கவே இயலாது என்பது போல் எழுதிக்கொண்டிருக்கிறார். காமராஜர் ஆட்சி (அப்பா சரி, பக்தவச்சலம் ஆட்சி) கழகங்களுக்கு கைமாறியபோது தமிழகத்தில் ஊழலும் சாராயமும் மட்டும் நுழைந்துவிடவில்லை; குண்டர் கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து என்ற பல எழவுகளுக்கு வித்திட்டவர் இந்த கருணாநிதி. அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் படுகொலை முதல் மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு (மூன்று பேர் கொலை) வரை கருணாநிதியுடன் நேரடி தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் பலவற்றை நினைவு கூறலாம். காழ்புணர்ச்சி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேக பண்பு என்றால், இவர் விஜயகாந்தின் கட்டிடங்களை இடிப்பது எவ்வகை உணர்ச்சியின் அடிப்படை என்று புரியவில்லை. ஆனால் ஒன்று, இதெல்லாம் தி.மு.க தொண்டர்கள், அழகிரி, குறிப்பிட்ட வாரியத்துறை அமைச்சர், அரிவாள், புல்டோசர் கொக்கிமுனை இத்தியாதி, இவர்கள்தான் செய்தார்கள் என்று கூறி அறிவிப்பாடம் எடுக்காமல் இருந்தால் சரி.
கிசுகிசு பாணியில் "அந்த எழுத்தாளர்", "இந்த எழுத்தாளர்" என்று ஒரு எழுத்தாளரை கூட நேரடியாக விமர்சனம் செய்ய தைரியமில்லாத சாரு, "அவர் ஜெயலலிதாவை இம்மாதிரி விமர்சனம் செய்வாரா?" என்று கேட்கிறார். சரி, இவர் சொல்வது போல "அந்த எழுத்தாளருக்கு" (அநேகமாக ஞானியை சொல்கிறார் என்று நினைக்கிறேன்) ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய தைரியமில்லை என்றே வைத்துக்கொள்வோம் (ஞானி ஜெ'வை கடுமையாக விமர்சித்து பல முறை எழுதியிருக்கிறார் என்பது வேறு) - ஆக ஜெ'வை விமர்சனம் செய்ய தைரியம் இல்லையென்றால் கருணாநிதியின் ஊழல், குடும்ப அரசியல் பற்றியும் எழுதக்கூடாது, அப்படித்தானே? ஆஹா, அற்புதமான லாஜிக். கருணாநிதியின் முரசொலி மிரட்டல்கள் முன்பு போல திராவிடக் கைக்கூலிகளால் பொருட்படுத்தப்படுவதில்லை, அவ்வளவுதான். அவர் வேண்டுமானால் இன்றும் ம்' என்றால் தீக்குளிக்க ஆயிரம்பேர் வருவார்கள் என்ற கனவில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கருணாநிதியின் இந்த சின்னப்புத்தியையும், அதன் பயனற்ற தன்மையையும் கருணாநிதியின் பரந்த உள்ளம் போல பாவிக்க வேண்டுமென்று சாரு விரும்புகிறார் போலும். மஞ்சள் துண்டு, மண்ணாங்கட்டி என்று பாசாங்கு காட்டிவிட்டு "கருணாநிதியை விமர்சனம் செய்துவிட்டேன் பார்" என்று சாரு சொன்னால், கேட்டுக்கொண்டு ஆமாம் சாமி போட அவர் ரஜினியும் இல்லை, நாங்கள் ரஜினி ரசிகர்களும் இல்லை. இன்றைக்கும் அழகிரி பற்றி பேசச்சொன்னால் மூச்சா போகும் சாரு, "யாரையும் அஞ்சாமல் விமர்சிப்பது" பற்றி ரொம்பத்தான் சவடால் அடிக்கிறார். "பாரதி போல் நான் தைரியசாலி இல்லை" என்று கூறி பம்மாத்து செய்துவிட்டால் இவர் சாயம் வெளுத்துப்போகாது என்று எண்ணிவிட்டாரா என்ன?
இவரின் நண்பர் கனிமொழி தேர்தலின்றி - பல மூத்த "தொண்டர்கள்" இருக்க, வெட்கமின்றி - நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுகொண்டது பற்றியும் சாரு வாய் திறக்க மாட்டார். அவர் அதிகாரத்தால் நடக்கும் சிபாரிசுகளை பயன்படுத்தவும் இவர் தயங்க மாட்டார் (காவல் துறை ஆணையர் அலுவலகம் சென்றது - ஒரு முறையேனும், விமர்சனதுக்குரியதே). இதையெல்லாம் கேட்டால் "இந்தியாவில் நடப்பது ஜனநாயகமே இல்லை, தமிழ்நாட்டு அரசியலில் எந்தக்கட்சிதான் குடும்ப அரசியல் நடத்தவில்லை" என்று கூறி கனிமொழிக்கு தலையயை சுற்றி மூக்கைத்தொட்டு கொடி பிடிப்பார்.
இப்பேர்ப்பட்ட ஒருவர்தான் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி எழுதிக்கிழிக்கிறார்? இவர் பணத்தை எப்படி செலவிடுகிறார் என்பது பற்றியோ எங்கே உணவு உண்கிறார் என்பது பற்றியோ நான் விமர்சனம் செய்யப்போவதில்லை. இவர் சொல்வதுபோல் "நான் ராஜ வாழ்கை தான் வாழ்வேன்" என்றால் வாழ்ந்துவிட்டுப்போகட்டும். ஆனால் "முன்னூறு ரூபாய் குடுத்து சோறு தின்னால்தான் செரிக்கும்" என்றால், முப்பது ரூபாய்க்கு முனியாண்டி விலாசில் பிரியாணி தின்பவன் எல்லாம் முட்டாளா? அல்லது ருசி தெரியாத சொரணை கெட்ட ஜென்மமா? இவரின் "ராஜ வாழ்க்கையை" "விளிம்புநிலை மனிதர்களுக்கு" தெரியப்படுத்தி என்ன சாதிக்க விரும்புகிறார்? அதே நேரம் தான் பிச்சைக்காரன் போல பத்து ரூபாய்க்கு சிங்கி அடிப்பது பற்றி சொல்லிவிட்டால் இவர் "விளிம்பு நிலை மனிதர்களின்" பிரச்சனைகளை எதிரொளிப்பதுபோல் ஆகிவிடும் என்று என்னுகின்றாரா?
இந்த லட்சணத்தில் ஜெயமோகன் தன் மகன் பத்தாம் ஆண்டு மதிப்பெண் பற்றி எழுதியது குறித்து விமர்சனம் வேறு. இவர் தன் மகன் கார்த்திக் பற்றி மட்டும் அகோ ஓஹோ என்று எழுதுவார், கார்த்திக் நியுசிலாந்து சென்று எடுத்த படங்களை வெளியிடுவார். பொது ஒழுக்க நெறி, நல்லெண்ணம், மனிதாபிமானம் எல்லாம் பாசிசத்தின் அடிப்படைகள் என்று வாதிடும் சாரு, தன் மனைவி ஒரு ஏழைக்கு புடவை கொடுத்தது பற்றி புளகாங்கிதம் அடையவோ, அதே அடிப்படையில் தன் மகன் எப்படி உயர்ந்தவன் என்று சொல்லவோ தயங்குவதில்லை.
சாரு பற்றி அவர் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எழுத்துக்களை மட்டும் வைத்தே அவரை இன்னும் பல விமர்சனங்களுக்கு ஆட்படுத்தலாம், ஆனால் அதற்கு நேரமோ அவசியமோ இல்லை. இதுவரை படித்த விமர்சனங்கள் ஏற்புடயதாகப்பட்டால் மற்ற விஷயங்கள் தானாகவே புலப்படும். இல்லையென்றால் இது வெறும் "அவதூருகளாக்தான்" தெரியும்.
Showing posts with label Charu Nivedita. Show all posts
Showing posts with label Charu Nivedita. Show all posts
சாரு நிவேதிதா - காற்றடைத்த பையடா
மமதை
கமல் கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் போல் ஆகி விட்டார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவைத்தான் யாரும் கட்சிக்குள்ளிருந்து விமர்சிக்க முடியாது. விமர்சிப்பவன் விரோதி என்ற தர்மம் அக்கட்சியினுடையது. மற்றும் , எல்லோருமே அவரை புரட்சித்தலைவி என்றே அழைக்க வேண்டும் ; நினைக்க வேண்டும். அதே போல் கமலை யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் அவர் கமலின் விரோதி ; கமலின் சினிமா ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத முட்டாள். மேலும் , அவரை உலக நாயகன் என்றே கருத வேண்டும். அப்படிக் கருதாதவருக்கு ஏதோ மோசமான உள்நோக்கம் இருக்கிறது. இதுதான் கமலின் இப்போதைய நிலை.Source
Disclaimer: I don't agree with every assessment Charu Nivedita has made on different movies. Notable disagreements with his take on Gautam Menon, Ameer and Mozhi.
Random Quote
அசோகமித்திரன் கணையாழியில் 40 ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். அதில்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுஜாதா கடைசிப் பக்கங்களை எழுதினார். ஒரு வகையில் இருவரும் சகாக்கள். அப்படிப்பட்டவர் சுஜாதாவின் மரணத்திற்கு எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை என்ன தெரியுமா ? " சுஜாதா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது என்னிடம் ஒரு கேமரா இருந்தது. அந்தக் கேமராவில் நாங்கள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்." ஐயா , என்னை நம்புங்கள். அவ்வளவுதான் இரங்கல் கட்டுரை. இப்படி ஒரு இரங்கல் கட்டுரை வேறு எந்த எழுத்தாளருக்காகவும் , உலகில் வேறு எந்த மொழியிலும் எழுதப் பட்டிருக்காது என்று நினைக்கிறேன். இருக்கட்டும் , எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது ? ' நான் அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் ஒரு பூனை வளர்த்தார். அது என்னைப் பார்த்து மியாவ் என்று சொன்னது. நானும் மியாவ் என்று அதனிடம் சொன்னேன். ' எழுதுகிறேனா இல்லையா என்று பாருங்கள் அசோகமித்திரன்.
Source
Subscribe to:
Posts (Atom)
